இந்தப் பதிவு 2012 ஆண்டு நான் பார்த்த சிறந்த 10 படங்களைப் பற்றியது.
முன்பே சொன்னது போல் இது என் ரசனைக்கு உட்பட்டது மட்டுமே.
10) அட்டக்கத்தி
விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் (ஆனாலும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை). சரியான நேரத்தில் சரியான ஆட்களின் கண்களில் பட்டதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படம் ஒரு அக்மார்க் என்டர்டெய்ன்மென்ட். சென்னைப் பக்கம் இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனது (காதல்) வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தனர். அதிலும் ஹீரோ ரியாக்ஷங்கள் பல இடங்களில் அற்புதம். தெத்துப்பல் ஹீரோயினும் அழகாகவே இருந்தார். எழுதி இயக்கியிருக்கும் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் க்கு நன்றிகள் பல.
9) கலகலப்பு & ஒரு கல் ஒரு கண்ணாடி
இரண்டு படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் ஒரே இடம்.
கலகலப்பு – Soul Kitchen படம் நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் கலகலப்பு எனக்கு நன்றாவே இருந்தது. படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா – “அமிதாப் மாமா” இளவரசு தான். சந்தானத்தின் காமெடி அடுத்த பெரிய பலம். வயிறு குலுங்க சிரித்து விட்டு வந்த படம். இன்றும் விடாமல் இணையத்திலும், டிவியிலும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் படம். முக்கியமாக இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ். சுந்தர்.சி ரிட்டன்ஸ் (ஆனாலும் காப்பி காப்பிதான்!)
ஒரு கல் ஒரு கண்ணாடி – மீண்டும் சந்தானம். சந்தானம் மட்டும் தான். ஹன்சிகா added attraction. அடுத்து தான் உதயநிதி வருகிறார். சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லையென்றாலும் ஆரம்பத்திலிர்ந்து கடைசி வரை சிரித்துவிட்டு வெளியே வந்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இயக்குனர் ராஜேஷ் சந்தானம் இல்லாமல் ஒரு காமெடி படமோ அல்லது ஏதாவதொரு படமோ எடுக்கட்டும், அப்பொழுது பார்க்கலாம்.
“மிரட்டல்” படத்தையும் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதிலும் சந்தானம் இருந்தார். காமெடியும் இருந்தது.
8) மாலை பொழுதின் மயக்கத்திலே
இந்தப் படத்தை டாப் 10னில் கொண்டுவரவில்லை என்றால் என் நண்பர்கள் என்னைப் பிண்ணிவிடுவார்கள். இந்தப் படத்தை, எத்தனை முறை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றே தெரியவில்லை. முக்கியமாக ஹீரோயின் நண்பருடன்
ஹீரோ பேசும் காட்சி. நடிப்பு, வசனம், இசை என்று எல்லாமே அருமையாக அமிதிருக்கும் காட்சி இது. அருமையான ஒன்-லைன், கன்வின்ஸிங்கான திரைக்கதை, புத்திசாலித்தனமான வசனங்கள், ப்ளீஸிங்கான ஒளிப்பதிவு, இனிமையான பாடல்கள் என்று இந்தப் படம் ,மொத்தமாக கொஞ்சம் “போர்” அடித்தாலும், தனித்தனியாக இவையனைத்தும் அற்புதமாக இருக்கும். பாடல்கள் அடிக்கடி வந்து நம்மைச் சோதிப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம் தான். ஆனால் ஒரு காஃபி ஷாப்பில் நடக்கும் கதையை, வெறும் 9 கதாப்பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு 2 மணிநேரத்திற்கு மேல் பாடல்கள் இல்லாமல் வேறு எப்படி நகர்த்த முடியும்? அதனால் மன்னித்துவிடலாம். இப்படிச் சொல்லக்கூடாது என்றாலும், தியேட்டருக்கு போய் பார்ப்பதை விட, ஒரு மழை பெய்யும் மாலைநேரத்தில் கையில் ஒரு சூடான காஃபியை வைத்துக்கொண்டு பார்க்க இது சரியான சினிமா. இந்தப் படத்தின் ஹீரோயின் “சுபா” இறந்த செய்தி கேட்டு நாங்கள் அடைந்த துக்கம் சொல்லில் அடங்காது. அழகு தன்னை மாய்த்துக்கொண்டது அன்று. கதாநாயகன் ஆரி கலக்கியிருக்கிறார். அருமையான expressions. சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இயக்குனர் நாராயண் நாகேந்திர ராவ். மிஷ்கினின் அசிஸ்டண்ட். இதுபோனட்ர வேறுபட்ட கதைக்களங்களில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்கத் தெரிந்தால் பெரிய ஆளாக வரும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் படத்தில் இவர் எழுதிய வசனங்கள் இவரது ஒரு பலம் என்றால், கோபி அமர்நாத் தின் ஒளிப்பதிவு, அச்சு வின் இசை கூடுதல் பலம்.
பி.கு: நான் மது அருந்துவதில்லை. மது அருந்துவதை ஆதரிப்பவனும் இல்லை என்பதால் மதுபானக்கடையை இங்கு கொண்டு வர மனம் ஒத்துவரவில்லை. ஆனால் “கன்டென்ட்” படி பார்த்தால், மதுபானக்கடை படமும் இந்த இடத்தில் வர வேண்டும். அருமையான முயற்சிக்கு இயக்குனர் கமலக்கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்.
7) தடையறத் தாக்க
சத்தியமாக இந்தப் படம் இவ்வளவு அருமையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேக்கிங்கில் என்னை அசரடித்துவிட்டது. அருண் விஜய் தன் வாழ்வில் எடுத்த பெஸ்ட் முடிவு இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகத்தான் இருக்க முடியும். ஆங்காங்கே சில ஓட்டைகள் இருந்தாலும் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் Characterization. ஹீரோ அருண் விஜய், ஹீரோயின் மம்தா, முக்கியமாக இரண்டு வில்லன்களை வடிவமைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெல்டன் இயக்குனர் மகிழ் திருமேனி! படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் தயவு செய்து
எப்படியாவது ஒரு முறை பார்க்க முயற்சி செய்யவும்.
6) நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இந்தப் படமும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை. பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ள, மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்ததாலோ என்னவோ, ஆரம்பம் பெரிதாக ஈர்க்கவில்லை, மிகவும் ஸ்லோ வாக இருந்தது. ஆனால் செகண்ட் ஆப் – அல்ட்டிமேட் காமெடி. சிரித்து சிரித்து வயிறு புண்ணானது நிஜம் முக்கியமாக – ப்ப்பா… யார்டா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு. செம சிரிப்பு. நண்பர்கள் மூவர், விஜய் சேதிபதி – அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கன்டென்ட் வைத்துப் பார்க்கும் பொழுது இன்னும் கொஞ்சம் டிரிம் செய்யப்பட்டு வந்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. படம் தேவையை விட நீளம். மேக்கிங் கூட குறும்பட அளவிற்கு தான் இருந்தது என்றாலும் பரவாயில்லை. பெரிதாக “குறை” போல் எங்கும் தெரியவில்லை. இயக்குனர் பாலாஜி தரணீதரன் அடுத்த படத்தில் பட்டையைக் கிளப்புவார் என்று இப்பொழுதே தெரிகிறது. வாழ்த்துக்கள். படத்தில் இடம் பெறாத “
ஓ கிரேசி மின்னல்” பாடல் எனது ஆல் டைம் பேவரிட்.
5) பீட்ஸா
சினிமாவிற்கு என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. முதல் பாதி முழுக்க ஒரு கதையை சொல்லிவிட்டு, பல முடிச்சுகளை கண்டமேனிக்கு போட்டுவிட்டு இரண்டாம் பாதியில் அந்த முடிசுகளை அவிழ்ப்பதற்கான பதில்களைச் சொல்லாமல் “அப்போ நாங்க சொன்னதெல்லாம் பொய், இது தான் நிஜம்” என்று சம்பந்தமே இல்லாத வேறு ஒரு கதையை, அதுவும் கிளைமாக்ஸிற்கு கொஞ்சம் முன் சொல்வதெல்லாம் படம் பார்த்துக்கொண்டிருப்பவனை ஏமாற்றும் செயல். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் இப்படி ஏமாற்றியதை மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். நானும் தான். லாஸ்ட் டுவிஸ்ட் எனக்கு பெரிய அதிர்ச்சியைத் தரவில்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. மேக்கிங், கதையைச் சொன்ன விதம், முக்கியமாக ஒளிப்பதிவு பிரமாதம். பிரமாதப் படுத்திவிட்டார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். விஜய் சேதுபதிக்கு இனி முழுக்க க்ரீன் சிக்னல் தான். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்து நடித்தால் தொடர்ந்து கவனிக்கப்படுவார். அட்டகத்தியைத் தயாரித்த அதே திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் C.V.குமார் தான் இந்த படத்தையும் தயரித்திருக்கிறார். நாளைய இயக்குனர் முதல் சீசனின் டைட்டில் வின்னர் நளன் இயக்கப் போகும் முதல் படத்தையும் நன்றிகள் பல.
4) துப்பாக்கி
என்னைக் கேட்டால் இந்த இடம் துப்பாக்கிக்கு மிகவும் அதிகம். விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க வேண்டாம். விஜய் இது போன்ற நல்ல கதைகளில் நடிக்க வேண்டும், அவருக்கு இருக்கும் மாஸ் ஓப்பனிங்கிற்கு வேல்யூ சேர்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசையும். துப்பாக்கியை நான் முழுக்க முழுக்க ஏ.ஆர்.முருகதாஸின் படமாகத்தான் பார்க்கிறேன். இவரது ஏழாம் அறிவிற்கு முந்தயை படங்களை கணக்கில் கொண்டால் துப்பாக்கி அப்படி ஒன்றும் சிறப்பான படம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை. இந்த ஆண்டு வெளியான எத்தனையோ ஏமாற்றங்களுக்கு (முக்கியமாக பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படங்கள்) மத்தியில் துப்பாக்கி எவ்வளவோ மேல். என்னை அசரடித்தது படததின் முதல் பாதி + விஜய் யின் நீட் பெர்பாமன்ஸ். இரண்டாம் பாதி OK. துப்பாக்கி பற்றிய எனது பதிவுகள்
பாகம் 01,
பாகம் 02
3)
2)
1)
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அளவிற்கெல்லாம் இந்த வருடம் எந்தப் படமும் வரவில்லை என்பதால் அந்த இடங்களை காலியாக விட்டுவிட்டேன். அவசியம் வேண்டுமென்றால் இங்கிலீஷ் விங்கிலீஷை மூன்றாம் இடத்திலும் நான் ஈ யை இரண்டாம் இடத்திலும் வைக்கலாம். ஆனால் இந்த இரண்டு படங்களையும் படங்களை தமிழ் படங்கள் என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொறுத்த வரை முதல் மூன்று இடங்கள் இந்த வருடம் காலியாக இருக்கிறது.
இந்த 7 படங்கள் தவிர இன்னும் 10 படங்கள் இருக்கிறது. சூப்பர் என்று சொல்லமுடியவில்லை என்றாலும், என்னைக் கவர்ந்த படங்கள் இவை. அதாவது OK 10 படங்கள்.
மைனாவில் உயிர் இருந்தது. ஆனால் கும்கியில் அது மிஸ்ஸிங். அதனாலேயே பெஸ்ட் பத்திற்குள் வர வேண்டிய படம் ஓக்கே பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. படத்தில் எனக்குப் பிரபு சாலமனே தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் சுகுமார் தான் தெரிந்தார். அவரை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருப்பது போல் தெரிந்தது. தம்பி ராமையாவின் ஒரே மாதியான காமெடி, ரிபீடட் காட்சிகள், பொம்னை சட்டையே செய்யாமல் யானையை மட்டுமே ரசிக்கும் அல்லி ப்ரீ-கிளைமாக்ஸிற்கு முன் திடீரென்று பொம்மனையும் காதலிப்பதாககச் சொல்வது, வில்லன் யானை கொம்பனை இரண்டே காட்சிகளில் மட்டுமே காட்டி, கிளைமாக்ஸ் யானை சண்டையையும் இரண்டு நிமிடத்திற்குள், அதுவும் இருட்டுக்குள்ளேயே முடித்தது, முக்கியமாக மைனாவில் ஹீரோ ஹீரோயின் என்றால் இந்தப் படத்தில் அவர்கள் தவிர்த்து மற்றவர்களைக் கொன்றது என்று படத்தில் என்னைக் கவராத விஷயங்கள் நிறைய இருந்தது. யானைகளை உண்மையாக மோத விட்டு படமெடுக்கக்கூடிய சூழல் இந்தியாவில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசஷயம் தான். கிராபிக்ஸ் தான் ஒரே தீர்வு. கதையின் அடிநாதமே கொம்பனை எதிர்ப்பதுதான், அதாவது கிளைமாக்ஸ் யானைச் சண்டைதான். அதை வெளிச்சத்தில் இன்னமும் கொஞ்சம் செலவு செய்து தெளிவாகக் காட்டியிருக்கலாம். இடம் வாங்கிப் போட்டு, பயிர் வளர்த்து அறுவடை செய்தெல்லாம் படம் பிடித்தவர்கள், முக்கியமான இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது வருத்தம். கொம்பன் மீதே முழு கவனமும் இருந்தததால் பொம்மன்-அல்லி காதல், அதிலிருக்கும் பிரச்சனை என்பதெல்லாம் தெரியவே இல்லை. இம்பாக்ட்டும் இல்லை. “ஆடுகளம்” படத்தில் காட்டப்பட்ட சேவல் சண்டை கிராபிக்ஸ் தான். பொம்மைச் சண்டை போல் தான் இருந்தது. பெரும்பாலானோர் நேரிலேயே பார்த்திருக்கும் சேவல் சண்டையையே மக்கள் கிராபிக்ஸில் காட்டிய போது ஏற்றுக்கொண்டபோது, சாமானியர்கள் யாரும் பார்த்திராத யானைச் சண்டையை கிராபிக்ஸில் ரொம்ப பெர்பெக்டாக வேண்டாம், கொஞ்சம் திறம்படக் காட்டியிருந்தால்கூட நிச்சயம் ரசித்திருப்பார்கள். இருட்டில், கீழே பள்ளத்தில் தொங்குவது கொம்பனா மாணிக்கமா என்றே தெரியவில்லை. படம் அந்த இடத்தில் என்னைப் பொறுத்தவரையில் தோற்றுவிட்டது. இது இருக்கட்டும். விஷுவல், டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் தமிழுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் சினிமாவிற்கு மிகவும் பழையது. நமது பலம் கதை, திரைக்கதை. அதிலாவது நம் இயக்குனர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். உலகமே கொண்டாடும் ஈரான் படங்களில் எல்லாம் என்ன டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இருக்கிறது? “கதை” – இது மட்டும் தான் ஹாலிவுட்டிலிருந்து மற்ற நாட்டவரை (படங்களை) வேறுபடுத்திக் காட்டும். இதை நம்மாட்கள் புரிந்து கொள்ளவேண்டும். மற்றபடி விக்ரம் பிரபுவிற்கு அருமையான அனுபவம். லக்ஷ்மி மேனன் அழகு.
காதலில் சொதப்புவது எப்படி
நாளைய இயக்குனர் ஷோவிலிருந்து முதலில் படம் இயக்க வந்த பாலாஜி மோகனின் படம். முழுக்க முழுக்க ஹீரோவின் செல்ஃப் நரேஷன் ஸ்டைலில் படம் பிடிக்கப்பட்டிருந்தது எவ்வளவு பலமோ அதே அளவு போகப் போக பலவீனமாகவும் அமைந்தது. ஆனாலும் புதிதான டிரீட்மெண்ட், யூத்தான மேக்கிங், காட்சிகள், அப்ரோச் என்று படம் நன்றாகவே இருந்தது. இயக்குனரது குறும்படங்களில் பார்த்த காட்சிகளே மீண்டும் படத்திலும் வந்ததால், கொஞ்சம் அலுப்பும் தட்டியது. காட்சிகள் இன்னமும் புதிதாக, கொஞ்சம் ப்ரெஷாக இருந்திருந்தால் படம் இன்னமும் அருமையாக இருந்திருக்கும். ஏகப்பட்ட காதல் படங்களைப் பார்த்து விட்டோம் என்பதால் படத்தைக் கொண்டாடி பெஸ்ட் 10 இல் வைக்க முடியவில்லை.
அம்புலி 3D
இந்த வருடத்தின் மற்றுமொரு ஆச்சரியம். தமிழின் முதல் Stereoscopic 3D படம். படத்தின் முதல் 10 நிமிடக்காட்சிகள் இன்னமும் என் கண் முன் தெரிகிறது. சப்பைக் கதை, அதை விட சப்பையான கேரக்டர்கள், காஸ்டியூம்கள் (முக்கியமாக அம்புலி காஸ்டியூம்) என்றாலும் மேக்கிங் அற்புதம். வாழ்த்துக்கள் ஹரி சங்கர், ஹரிஷ் நாராயண்.
3
படத்தின் முதல் பாதியால் தப்பியது ஐஸ்வர்யா தனுஷின் “3”. இரண்டாம் பாதி முழுச் சொதப்பல், கொலைவெறி பாடலைப் விஷுவலாகப் பார்த்தவர்களுக்கெல்லாம் கொலைவெறி வந்தது. பள்ளிப் பருவத்தில் காதல் என்பதெல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் அதிர்வுகள் அதிகம். அடுத்தடுத்து வரிசையாக “பள்ளியில் காதல்” டைப் படங்கள் வருவது சரியல்ல. அதே போல் “நோய் கதைகள்”. போன பதிவிலேயே இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். ஹீரோவிற்கு கேன்சர் என்று ஆரம்பித்து, பார்ப்பவர்களைச் சாவடிப்பதை தமிழ் சினிமா நிறுத்தியே ஆக வேண்டும். கேன்சர், மஞ்சள்காமாலை, வரட்டு இருமல் என்று எதையாவது சொல்லி ஒரு டாக்டரை வைத்து “இந்த வியாதி உள்ளவங்க என்ன செய்வாங்க டாக்டர்?” “இவங்கள குணப்படுத்த வழியே இல்லையா டாக்டர்?” “நீங்க நெஜமாவே டாக்டர் தானா டாக்டர்?” என்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு டாக்டர் வாயாலேயே மொத்தக் கதையையும் விவரமாகச் சொல்லிவிட்டு சாவகாசமாக கிளைமாக்ஸை நோக்கி படத்தை நகர்த்துவது என்பது என்னைப் பொறுத்தவரையில் மோசமான, மிக மோசமான கதைசொல்லலுக்கான எடுத்துக்காட்டு. திரைப்படம் என்பது காட்களின் வாயிலாகத்தான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். வெறும் பக்கம் பக்கமான வசனங்களால் அல்ல.
Bi-Polar Disorder நோயை வைத்து எடுக்கப்பட்ட, பாராட்டக்கூடிய ஒரு நல்ல முயற்சி, லக்ஷ்மி ராம்கிருஷ்ணனின் “ஆரோகணம்”.
Bi-Polar Disorder நோயுடைய கதாநாயகியைக் கொண்ட டி.வி சீரியல் “Homeland”. இந்த ஆங்கிலத் தொடர் பற்றியும், நோயை அவர்கள் காட்டிய விதம் பற்றியும் நான் எழுதிய
பதிவு இது.
சுந்தரபாண்டியன்
முதல் முறை தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்த போது, எனக்கும் சரி, உடன் வந்த என் நண்பனுக்கும் சரி, படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் அடுத்து இந்தப் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது “படம் நன்றாகத்தானே இருக்கிறது” என்று தோன்றியது. முதல் தடவை படம் எங்களுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் – நாங்கள் கொடுத்த டிக்கெட் விலை – 250ரூ! 100ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் விலை இருந்திருந்தால் நாங்கள் இந்தப் படத்தைக் கொண்டாடியிருப்போம். சரி சொந்தக்கதையை விடுங்கள். சசிகுமார் இன்னும் எத்தனை நாளைக்கு “நட்பு – துரோகம்” என்கிற ஆயுதத்தையே வைத்துக் கொண்டு சினிமாவில் போராடப் போகிறார் என்று தெரியவில்லை. மதுரை பேக்ரவுண்ட், ஊருக்கே பிடிக்கும், எதுவும் படித்திருக்கவில்லையென்றாலும் எல்லாம் தெரியும் கதாநாயகன், வளைத்து வளைத்து காதலிக்கும் ஹீரோயின், முக்கியமாக “கூலாங்கல்லு பல்லுக்காரன்”பாட்டையெல்லாம் சுந்தரபாண்டியனோடு நிறுத்திக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். வேற ஏதாவது முயற்சி பண்ணுங்க சசி. லக்ஷ்மி மேனனுக்கு இதைவிட அருமையான “முதல் படம்” கிடைக்காது. அழகு!
சாட்டை
சொல்லிய கருத்திற்காக இந்த படம் எனது OK லிஸ்டில் இடம் பெருகிறது. காட்சிகள் டிராமாத்தனமாக இருந்தாலும், சில காட்சிகள் பாராட்டும்படி இருந்தது. அரசுப்பள்ளிகளில் நடக்கும் அவலங்களில் முடிந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். சிறிய பள்ளிகளில் இன்னும் பிரச்சனைகள் அதிகம். அத்தனையையும் காட்டினால் நம் அரசிற்குத் தான் அவமானம். அரசு உத்யோகத்திற்காக காத்துக்கிடக்கும் ஆசிரியர்களைவிட, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவு. ஸ்கூலிற்குப் போகும் பெண்ணிடம் ஒரு பையன் வழிமறித்து “என்னைக் காதலிப்பியா மாட்டியா” என்று கேட்கும்படியான காட்சிகள் இனி வேண்டாம். ப்ளீஸ். இது போன்ற காட்சிகளால் தான் இன்று வழி மறிப்பதை சரி என்று புரிந்துகொள்ளும் மாணவன் நாளை தனக்குக் கிடைக்காத பெண்ணின் மேல் ஆஸ்ட் அடிப்பதும் தப்பில்லை என்று தனக்குத்தானே ஒரு நீதியை வகுத்துக்கொண்டு செயல்படுகிறான். இரண்டாம் பாதியில் அந்தப் பெண் காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்பதைப் போல் காட்டியிருப்பதெல்லாம் ம்ஹூம்ம்… சரியில்லை. இது தப்பான எடுத்துக்காட்டு. இறுதியில் அந்த ஜோடி ஒன்று சேரவில்லை என்று காட்டினாலுமே, அந்தக் காதல் டிராக் தவிர்த்து மீதிப் படம் நல்ல படமே. சாட்டை படத்தைப் பற்றிய எனது முந்தைய
பதிவு இது.
சாருலதா
மாற்றானை விட சாருலதாவில் Conjoined Twins Concept புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. Genetics அது இதுவென்று போட்டுக் குழப்பாமல், சாதாரணமாக ஒட்டிப்பிறந்த இரட்டையர் பெண்களில் ஒருத்திக்கு காதல் வருகிறது. மற்றவளாய் பாரமாக நினைக்கிறாள். பிரிகிறார்கள். அப்படிப் பிரியும்போது ஒருவள் இறந்து விட, பிழைத்தவள் தான் தன் சாவிற்குக் காரணம் என்று இறந்தவள் நினைத்து பழிவாங்கத் தொடங்குவது தான் கதை. அருமையான ஒரு டுவிஸ்ட் படத்தில் உண்டு. ஆனால் அதை காட்சியப்படுத்திய விதம் வொர்ஸ்ட். பிரியாமணி தேசிய விருது நடிகை. அல்வா சாப்பிடுவது போல் சும்மா அசால்ட்டாக நடித்து விட்டுப் போயிருக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு என்று மும்மொழிகளில் இந்தப் படம் வெளியானது. தமிழ், தெலுங்கில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் கன்னடத்தில் சூப்பர் ஹிட்!
நான்
Identity Theft Concept வைத்து ஒரு புதிய முயற்சியைக் கொடுத்திருந்தார்கள். அடெம்ப்ட் ஒக்கே. ஆனால் படம் சுமார் தான். விஜய் ஆண்டனி சும்மாவே நின்று கொண்டிருந்ததைப் போலத் தெரிந்தது. இசையமைப்பதை மட்டும் தான் அவர் செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நடிப்பது என்று முடிவு செய்தால் இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்து, பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும். இல்லையென்றால் கஷ்டம்.
நண்பன்
படம் முழுக்க எனக்கு 3 IDIOTS மட்டுமே தெரிந்தது. விஜய் யோ, ஷங்கரோ தெரியவேயில்லை. 3 IDIOTS எனக்குப் பிடித்த படம் என்பதால் இந்த இடம். 3 IDIOTS 35 கோடியில் தயாரிக்கப்பட்ட படமாம். ஆனால் நண்பனின் பட்ஜெட் 60 கோடி. சிறப்பு!
நீதானே என் பொன்வசந்தம் & மாற்றான்
இந்த இரண்டு படங்களுமே விமர்சனங்கள் சொல்லும் அளவிற்கு மோசமில்லை என்றே சொல்வேன். கௌதம் மேனன் – கே.வி.ஆனந்த். இருவருமே தங்களது ரசிகர்களை ஏமாற்றியது என்னவோ உண்மை தான். ஆனால் இருவர் மீதும் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. இருவரது அடுத்த படங்களையும் நான் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
OK லிஸ்ட் முடிந்தது!
இறுதியாக இரண்டு படங்களைப் பற்றி நான் சொல்லவேண்டும்.
வழக்கு எண் 18/9
இந்தப் படத்தை எந்த லிஸ்டிலும் என்னால் கொண்டு வரமுடியவில்லை. பெஸ்ட், ஓக்கே, வொர்ஸ்ட் என்று எதிலும் அடங்காத ஒரு படம் வழக்கு எண். தமிழின் ரியலிஸ சினிமா. முகத்தில் அறையும் உணமியைச் சொன்ன படம். தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய படம். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சோகம், கண்ணீர், வேதனை, இழப்பு, துரோகம் எல்லாம் சொந்த வாழ்க்கையிலேயே நிறைய இருக்கிறது. அதையே தியேட்டரிலும் போய் பார்ப்பது, எனக்குப் பிடிக்காது. எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தியேட்டருக்கு போய் படம் பார்ப்பது. அங்கும் தினம் தினம் நான் பார்க்கும், வாழும் இயல்பு வாழ்க்கையையே பார்க்க நான் விரும்புவதில்லை. நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கும் கேட்கும் சம்பவங்களின் கோர்வை தான் வழக்கு எண். அதற்காக நம் எல்லோர் வாழ்க்கையிலும் இப்படி நடந்திருக்கும் என்று சொல்லவரவில்லை. இது நல்ல படம் இல்லை என்றும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும், இந்த மாதிரி படங்கள் தமிழில் இப்போதிருக்கும் சூழலில் நிச்சயம் (அவ்வபோது) வர வேண்டும், நானும், அனைவரும் இந்தப் படங்களைப் பார்க்க வேண்டும். முக்கியமாக வெற்றியடையச் செய்ய வேண்டும். எதையெதையோ தின்கிறோம், அப்படியே கசக்கும் என்று தெரிந்தும், நம்மை குணப்படுத்தும் என்ற ஒரே காரணத்திற்காக மாத்திரையையும் விழுங்கிவிடுவதில்லையா, அதுபோல. நமக்கு வராது என்ற நம்பிக்கை இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதில்லையா அது போலத் தான் இந்தப் படமும் நமக்கு!
நீர்ப்பறவை
வழக்கு எண் படம் பற்றிய எனது கருத்தைத் தான் இந்தப் படத்திற்கும் சொல்வேன். சிறு வித்தியாசம். இந்தப் படம் உண்மையில் எனக்குப் பிடித்திருந்தது. கடலும் கடல் சார்ந்த பகுதியையும் அருமையாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன். விஷ்ணு பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் சுனைனா கலக்கியிருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. “மகனை கண்மூடித்தனமாக நேசிக்கும் தாய்” என்கிற கதாப்பாத்திரத்தில் இவர் இன்னும் எத்தனை படங்கள் நடித்தாலும் பார்த்துகொண்டே இருக்கலாம். நந்திதா தாஸ் உட்பட படத்தில் நிறைய நட்சத்திரக் கூட்டம். அவர்கள் எல்லாம் எதற்கு என்று புரியவில்லை. மீனவர் வாழ்க்கை, குடியின் தீமை போன்றவற்றை அழகாகச் சொல்லிய இயக்குனர் சீனு ராமசாமி, மீனவர்களின் முக்கியமான பிரச்சனையை மட்டும் மற்ற எல்லோரையும் போல பட்டும் படாமல் தான் சொல்லியிருக்கிறார். படத்தில் சமுத்திரக்கனி (அருமையான நடிப்பு) மட்டும் தான் இது தொடர்பாக பேசுகிறார். அதுவும் மூன்றே காட்சிகள் மட்டும் தான். எதையும் முழுதாக, தெளிவாகச் சொல்ல்வில்லை. விருது வாங்க வேண்டும் என்கிற நினைப்பு மட்டும் தான் இயக்குனர் மனதில் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இவரும் பேட்டிகளில் “விருது” பற்றி மட்டும் தான் பேசுகிறார். பேசுகிறாரே தவிர படத்தில் விருது கொடுக்கும்படியான காட்சிகள் இல்லை என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார். படம் இன்னமும் கொஞ்சம் “ரா”வாக இருந்திருக்க வேண்டும். காட்சிகளில் தமிழரின் கோபம் தெரிந்திருக்க வேண்டும். தயரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்பது தான் பிரச்சனை என்றால் வேறு தயாரிப்பாளரைத் தேடிப் போயிருக்கலாம். அல்லது சொந்தக் காசைப் போட்டே படம் எடுத்திருக்கலாம். தேசிய விருது இயக்குனர் எனபதால் நிச்சயம் இவருக்கு குறைந்த பட்ச ஓப்பனிங்காவது இருந்திருக்கும். சேஃப்டியும் முக்கியம், பணமும் முக்கியம், விருதும் வேண்டுமென்றால் எப்படி? சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக, தெளிவாக இன்னமும் கொஞ்சம் குத்தலாக சொல்லியிருக்கலாமே? “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால்” படங்களை எப்படி இலங்கை பிரச்சனையைச் சொல்லும் படம் என்று சொல்ல முடியாதோ அது போலத்தான் என்னைப் பொறுத்த வரை நீர்ப்பறவையையும் மீனவர் பிரச்சனையை சொல்லும் படமாக ஏற்றுக்கொள்ள முடியாது. குடியின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு கடலோர இளைஞன், திருந்தி தன் வாழ்க்கையைத் தொடங்கும் போது குண்டடிபட்டு சாகிறான் என்பதை மட்டும் தான் இந்த படம் நமக்குச் சொல்கிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் இந்தப் படத்தை TOP10 இல் வைத்துக் கொண்டாடவும் முடியவில்லை. OK 10 இல பத்தோடு பதினொன்றாக வைக்கவும் மனம் வரவில்லை!
கழுகு, கிருஷ்ணவேணிப் பஞ்சாலை, ஆச்சரியங்கள், பெருமான், தோனி, அம்மாவின் கைப்பேசி என்று இன்னமும் பல படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவற்றில் சில படங்கள் வேண்டுமென்றே பார்க்கவில்லை. சில படங்கள் விருப்பம் இருந்தும் பார்க்க முடியவில்லை.
இந்த ஆண்டு நிலைமையை கணக்கில் கொண்டு தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டு பல நல்ல படங்கள் வெளியாகும் என்று நம்புவோம்.
அப்படியே 2012 ஆம் ஆண்டின் “சிறந்த” லிஸ்டையும் கொடுத்து நிறைவு செய்துவிடுகிறேன்.
சிறந்த இசை – D. இமான் (கும்கி)
சிறந்த பின்னனி இசை – அச்சு (மாலை பொழுதின் மயக்கத்திலே)
சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி (துப்பாக்கி, முகமூடி)
சிறந்த பின்னணிப் பாடகர் – D. இமான் (ஒன்னும் புரியல-கும்கி), “கானா” பாலா 🙂
சிறந்த பின்னணிப் பாடகி – மஹாலட்சுமி அய்யர் (கால் முளைத்த பூவே-மாற்றான்)
சிறந்த ஒளிப்பதிவு – சுகுமார் (கும்கி), கோபி அமர்நாத் (மா.பொ.ம, பீட்ஸா), நீர்ப்பறவை (பாலசுப்ரமணியன்)
சிறந்த படத்தொகுப்பு – மதுபானக்கடை (யார் என்று தெரியவில்லை)
சிறந்த ஸ்டண்ட்ஸ் – அனல் அரசு (தடையறத்தாக்க), Tony Leung Siu Hung (முகமூடி)
சிறந்த கலை இயக்குனர் – விஜய் முருகன் (அரவான்)
சிறந்த உடையலங்காரம் – நளினி ஸ்ரீராம் (நீ.தா.என்.பொ.வ)
சிறந்த காமெடியன் – சந்தானம் (OK OK, கலகலப்பு)
சிறந்த துணை நடிகை – சரண்யா பொன்வண்ணன் (Ok Ok, நீர்ப்பறவை)
சிறந்த துணை நடிகர் – முத்துராமன் (வழக்கு எண் 18/9)
சிறந்த புதுமுக நடிகர் – விக்ரம் பிரபு (கும்கி)
சிறந்த புதுமுக நடிகை – லக்ஷ்மி மேனன் (சுந்தரபாண்டியன், கும்கி)
சிறந்த நடிகர் – விஜய் (துப்பாக்கி), விஜய் சேதுபதி (பீட்ஸா)
சிறந்த நடிகை – ஸ்ருதிஹாசன் (3), சமந்தா (நீ.தா.எ.பொ.வ)
சிறந்த வசனம் – நாராயண் நாகேந்திர ராவ் (மாலை பொழுதின் மயக்கத்திலே)
சிறந்த கதை – நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
சிறந்த திரைக்கதை – கார்த்திக் சுப்புராஜ் (பீட்ஸா), ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி முதல் பாதி மட்டும்)
சிறந்த இயக்குனர் – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
சிறந்த நடனம், சிறந்த வில்லன், சிறந்த படம் என்று இந்த வருடம் எதுவும் இல்லை.
Like this:
Like Loading...
Related